அராலி முதல் பொன்னாலை வரையிலான கரையோரத்தை சுவீகரிக்க முயற்சி ?

யாழ்ப்பாணம் – அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வளப்பிரதேசமாக ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதி தொடர்பில் அண்மையில் பொது அமைப்புகளுடன் சங்கானை பிரதேச செயலாளர் கலந்துரையாடல் ஒன்றினை நடாத்தினார்.

அதன் போது, குறித்த பகுதி மக்கள் அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வளப்பிரதேசமாக ஒதுக்கீடு செய்வதை ஏற்றுக்கொள்ளவில்லை.

கரையோர பகுதி மக்களின் வாழ்வாதரமே கடற்கரையை நம்பியே காணப்படுகின்றது. மாட்டுவண்டி சவாரித்திடல், சுடுகாடுகள், விவசாய நிலங்கள் காணப்படுகின்றன. ஆகவே வன வள பாதுகாப்பு திணைக்களத்தின் முன்மொழிவை முற்றிலும் எதிர்க்கிறேன்.

அதேவேளை குறித்த பகுதியை வன வள பாதுகாப்பு திணைக்களத்திற்கு வழங்கினால் விகாரைகள், சிங்கள குடியேற்றம் வரவும் வாய்ப்பு உள்ளது என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.

எனவே யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் குறித்த முன்மொழிவை நிராகரித்து வன வள பாதுகாப்பு திணைக்களத்திற்கு கடிதம் அனுப்ப வேண்டும். இல்லையேல் இதற்கு எதிராக போராட்டம் நடத்துவோம் – என்றார்.