வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் பாதுகாப்பு விவகாரத்தில் இத்தாலிரோம் நகரத்தை சிறந்த உதாரணமாக நாம் கொள்ள வேண்டும். வடக்குமற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் மரபுரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் அங்கு வாழும் தமிழ் மக்களின் உரிமைகளும், அவர்களின் அடையாளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. காவிந்த ஜயவர்தன வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலக சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு வலியுறுத்திய அவர்மேலும் கூறுகையில், தற்போதைய பிரதான பேசு பொருளாக தொல்பொருள் மரபுரிமைகளே உள்ளன. .தொல்பொருள் மரபுரிமைகளும் வரலாற்று அடையாளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் பாதுகாப்பு விவகாரத்தில் இத்தாலி ரோம் நகரத்தை சிறந்த உதாரணமாக நாம் கொள்ள வேண்டும். ரோம் நகரில் தொல்பொருள் மரபுரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன அத்துடன் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும், அவரவர் உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய 30 வருடகால யுத்தம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது. யுத்தம் முடிவடைந்த பின்னரும் அப்பிரதேச மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றமடையவில்லை.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் எமது தமிழ் உறவுகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் தொல்பொருள் மரபுரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்.
கஜேந்திரகுமார் எம்.பி.க்கும் பொலிஸாருக்கும் இடையில் அண்மையில் இடம் பெற்ற கருத்தாடலின் போது பொலிஸார் செயற்பட்ட விதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டத்தை முறைகேடாக பயன்படுத்திய பலர் பாராளுமன்றத்தில் உள்ளார்கள். அரச அதிகாரிகளை தலைகுனிய வைத் தவர்கள் பாராளுமன்றத்தில் உள்ளார்கள். இவ்வாறான நிலையில் கஜேந்திரகுமார் விவகாரத்தில் இனவாதத்துடன் செயற்படுவது வெறுக்கத்தக்கது என்றார்.