Link: https://www.virakesari.lk/article/81428


அரசியல் வெறுமையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவே கூட்டமைப்பினர் நாடகம் போடுகின்றனரென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் 1173 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மகிந்த ராஜபக்சவை சந்தித்தமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு பதாகைகளை தாங்கியிருந்ததுடன் ஊடக சந்திப்பையும் நடத்தியிருந்தனர்.
இதன்போது சங்கத்தின் இணைப்பாளர் கோ. ராஜ்குமார் கருத்து தெரிவிக்ககையில்,
பிரதமர் மகிந்த ராஜபக்சவை தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் சந்தித்திருந்தனர். ஆனால் நாங்கள் இந்த போராட்டத்தினை ஆரம்பித்த காலத்திலும், இவ்வாறான போராட்டம் தமிழர் தாயக பிரதேசத்தில் ஆரம்பித்த போதும், தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் ரணில் அரசாங்கத்துடன் இருந்து மகிந்த ஆட்சிக்கு வந்துவிடுவார் என மக்களுக்கு அச்சமூட்டிக்கொண்டிருந்தனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் இதனையே கூறியிருந்தனர்.
சம்பந்தன் சுமந்திரன் ஆகியோர் தமது நண்பரான ரணில் விக்கிரமசிங்க காலத்தில் பாடிய பாடலையே கோத்தபாய ராஜபக்ச காலத்திலும் மகிந்த முன்னிலையில் பாடியுள்ளனர்.
அந்த பாடலின் பொருளானது உள்நாட்டு விசாரணையும் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தங்களுக்கான மூலப்பொருளை பெற்றுக்கொள்வதற்காகவுமே இருக்கின்றது.
இது தந்தை செல்வாவின் அரசியல் அல்ல!
தமிழ் மக்களின் காதுகளில் கடவுள் தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்ற வாசகமே ஒலிக்கின்றது.
அது மாத்திரமின்றி மகிந்தராபக்சவிடம் கூட்டமைப்பினர் ஒரு கோவையை கொடுத்துள்ளனர். அது என்னவென்று தெரியாது. கடந்த ஆட்சிக்காலத்தில் நிறைவேற்ற வேண்டிய, நிறைவேற்றக்கூடியதாக இருந்த விடயங்களை இந்த ஆட்சிக்காலத்தில் கொடுத்துள்ளமை நகைப்புக்குரியதே.
அவர்களுக்கு அரசியல் வெறுமையொன்று தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த வெறுமையில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் தமது பதவிகளை பெற்றுக்கொள்வதற்காகவும் தேர்தல் நேர போலி பிரசாத்திற்காகவுமே காணி பிடிப்பு, அரசியல் கைதிகள் விடயங்களை மீண்டும் கூட்டமைப்பினர் கையில் எடுத்துள்ளனர். என்று அவர் தெரிவித்தார்.

