இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களை கடந்த ஆண்டு இறுதியுடன் ஒப்பிடுகையில் அரசாங்கத்தின் உள்நாட்டு கடன் காரணமாக நாட்டின் மொத்த பொதுக் கடன் 6.853 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.
இதனை திறைசேரியின் பகுப்பாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நாட்டின் பொதுக் கடன் நிலைமையின் நிலை குறித்து அமைச்சகம் வெளியிட்ட காலாண்டு அறிக்கையின்படி, மொத்தக் கடன் 84.703 பில்லியன் டொலர்களில் இருந்து 91.561 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
வெளிநாட்டு கடன்
மேலும், திறைசேரி உண்டியல்கள், திறைசேரி பத்திரங்கள், பாதுகாப்பு அமைச்சின் சுஹருபாய கடன் கணக்கு, ஓய்வூதியப் பணிக்கொடை போன்ற பல்வேறு வடிவங்களில் அரசாங்கம் மேலும் கடன்களை பெற்றுக்கொண்டுள்ளது.
இதனால் உள்நாட்டு கடன் கடந்த ஆண்டு டிசம்பரில் 40.12 பில்லியன்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 46.89 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மத்திய அரசின் மொத்த வெளிநாட்டு கடன் 36.09 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்கள்
முக்கிய கடனாளிகளான உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன்கள் மொத்த வெளிநாட்டு கடன்களில் 90 வீதமாகும். அவற்றின் தொகை 10 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இதனை தவிர பாரிஸ் கிளப் நாடுகள் 4.54 பில்லியன் டொலர்களையும், பாரிஸ் கிளப் அல்லாத நாடுகள் – 6.78 பில்லியன் டொலர்களையும் இலங்கைக்கு வழங்கியுள்ளது.