ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 49ஆவது கூட்டத்தொடர் இன்று (28) ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த 5 தமிழ்க் கட்சிகள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாருக்குக் கூட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளன.
2022 பெப்ரவரி 25ஆம் திகதியிடப்பட்டு எழுதப்பட்டுள்ள மேற்படிக் கடிதத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் க. சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறிகாந்தா ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கான அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது,
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக எழுத்துமூலம் அறிவிப்பை வெளியிட நீங்கள் தயாராகி வரும் நிலையில், ஐ.நா தீர்மானம் 46/1, மார்ச் 2021 இல் இயற்றப்பட்டதில் இருந்து தமிழர்களின் நிலை குறித்த மதிப்பீட்டை இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.
ஜனவரி 12, 2021 அன்று பொறுப்புக்கூறலைக் குறிப்பிடும் உங்கள் அறிக்கைக்கு நாங்கள் எங்கள் பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறோம்.
“குற்றவியல் பொறுப்புக்கூறலை முன்னெடுத்துச் செல்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கும் உறுப்பு நாடுகளுக்கு பல தெரிவுகள் உள்ளன.
இலங்கையின் நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மேலதிகமாக, இலங்கையில் அனைத்து தரப்பினரும் செய்த குற்றங்களுக்கு எதிராக உறுப்பு நாடுகள் சர்வதேச விசாரணை தீவிரமாக, வேற்று நாடுகள் அல்லது உலகளாவிய அதிகார வரம்பிற்கு உட்பட்ட கொள்கைகளுக்கு ஏற்ப தங்கள் சொந்த தேசிய நீதிமன்றங்களுக்கு முன்பாக பாரப்படுத்த முடியும்.
உயர் ஸ்தானிகர் உறுப்பு நாடுகளை மனித உரிமை ஆணையரின் அலுவலகத்தோடு பணியாற்ற, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் பிரதிநிதிகள் உட்பட பொறுப்புக்கூறலுக்கான இவ்வாறான முறைமைகளை ஊக்குவிக்க, சாத்தியமான சர்வதேச குற்றங்கள் பற்றிய விசாரணைகள் ஆரம்பித்தல் மற்றும் இதில் முன்னேறுவதற்கான அர்ப்பணிப்பு திறனுக்கு ஆதரவு வழங்க ஊக்குவிக்கிறார்.
இந்த முயற்சிகள் உறுப்பு நாடுகள், நம்பத்தகுந்த பாரதூரமான மனித உரிமை மீறல்கள் அல்லது துஷ்பிரயோகங்களுக்குப் பொறுப்பான நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அரசு அதிகாரிகள் மற்றும் பங்கேற்றவர்களுக்கும் எதிரான சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் போன்ற இலக்குத் தடைகளையும் விண்ணப்பிக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நடைமுறை சாத்தியமான நன்மைகளை வழங்கவும் அத்துடன் அதற்கான முயற்சிகளுக்கும் ஆதரவு வழங்குங்கள்”.
பிப்ரவரி 18, 2021 அன்று 20 முன்னாள் உயர்மட்ட ஐ.நா அதிகாரிகளின் பகிரங்க கடிதத்தையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்.
கையொப்பமிட்டவர்களில் நான்கு முன்னாள் ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர்களும் அடங்குவர் – ஐ.நா.வின் நான்கு முன்னாள் உயர் அதிகாரிகள், இலங்கைக்கு விஜயம் செய்து அறிக்கைகளை எழுதியிருந்த ஒன்பது முன்னாள் சிறப்பு அறிக்கையாளர்கள், மேலும், செயலாளர் நாயகத்தின் இலங்கை தொடர்பான நிபுணர்கள் குழுவின் மூன்று உறுப்பினர்களும் அடங்குவர்.
கையொப்பமிட்டவர்கள் குறிப்பிட்டது போல், ” இலங்கை தொடர்பாக சமீபத்தில் மனித உரிமைகள் ஐ.நா. உயர் ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் மீண்டும், நீதித்துறை மற்றும் பொறுப்பு கூறலில் நாட்டின் முன்னேற்றம் இன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் பகுப்பாய்வின் அடிப்படையில் காணப்படும் போக்குகளின் நீடித்த தேடலின் மையக் கூறுகளின் படி இலங்கையில் அத்துமீறல்கள் மற்றும் அட்டூழியங்கள் மற்றும் உரிமை மீறல்கள் மற்றும் மோதல்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பது வெகுஜன மனித உரிமைகளுக்கான நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான தீர்க்கமான சர்வதேச நடவடிக்கைக்கான கட்டாய தேவையை உருவாக்குகிறது.
” முடிவில், ” அனைவரின் மனித உரிமைகளையும் அர்த்தமுள்ள முறையில் நிலைநிறுத்த இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான தயக்கமானது தீர்க்கமான, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதி செய்வதற்கான சர்வதேச நடவடிக்கை மட்டுமே இலங்கையின் வன்முறை சுழற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும்”.
கடந்த ஆறு மாதங்களில், 2009 இல் முடிவடைந்த போரின் போது மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்களுக்கு தண்டனை விதிக்கப்படாமல் தொடர்ந்து இருந்தது மற்றும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானங்களை அரசாங்கம் மீண்டும் மீண்டும் புறக்கணித்தது.
இதனால், நீதி ஸ்தம்பித்து, தண்டனையின்மை நீடித்தது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், சிவில் சமூகத் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பலர் இலங்கை அதிகாரிகளால் அதிகளவில் அச்சுறுத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டனர்.
இலங்கையின் சட்ட அமலாக்க அதிகாரிகளால் கொவிட்-19 கட்டுப்பாடுகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களின் அதிகரித்த பயன்பாடு அமைதியான போராட்டங்களுக்கான சந்தர்பங்களை கட்டுப்படுத்துகிறது,
அதே நேரத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் ஓரங்கட்டப்படுவது தொடர்கிறது. “அபிவிருத்தித் திட்டங்கள்” என்ற போர்வையில், மக்கள் தொகையை மாற்றவும், வடகிழக்கு தமிழ் பேசும் பகுதிகளின் தொடர்பை சீர்குலைக்கவும், தமிழ் மக்களுக்கு அவர்களின் நிலங்கள் அணுகலை மறுக்கவும், அரசாங்கத்தால் இயக்கப்படும் சிங்கள – பௌத்த குடியிருப்புக்கள் (குடியேற்றங்கள்) பாரம்பரிய தமிழர் பகுதிகளில் வளர்ந்து வருகின்றன.
மகாவலி அதிகாரசபை, தொல்பொருள் திணைக்களம், வன திணைக்களம் மற்றும் வனவிலங்கு திணைக்களம் உட்பட பல அரச திணைக்களங்கள் இந்த முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஏறக்குறைய சிங்கள – பௌத்த நபர்களை உள்ளடக்கிய இலங்கை இராணுவத்தின் பெருமளவிலான பிரசன்னத்தினால் இந்த அத்துமீறல் எளிதாக்கப்படுகிறது.
தற்போதைய இனவாத அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் சனத்தொகை நிலையை சீர்குலைத்து, தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் பிரதேசங்களுக்குள் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதில் குறியாக உள்ளது.
சிங்கள – பௌத்தர்களை கொண்ட பிரதேசங்களை தமிழ் மாவட்டங்களில் இணைத்து, அதன் மூலம் தமிழ் பிரதேசங்களில் சிங்கள – பௌத்த சனத்தொகையை அதிகரிக்கும் வகையில் பிரதேச எல்லைகளை வரையறுக்கும் வேலைத்திட்டத்தில் இலங்கை அரசாங்கமும் ஈடுபட்டு வருகின்றது என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண்கள் தமது வாழ்வில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர். சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம் (ITJP) பிப்ரவரி 2017 இல், தமிழ்ப் பெண்கள் “பாலியல் அடிமைகளாக” அடைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ “துஸ்பிரயோக முகாம்கள்” பற்றிய விவரங்களை ஐ.நாவிடம் ஒப்படைத்தது.
மேலும், ஏப்ரல் 2013 இல் இங்கிலாந்து வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலக அறிக்கையின்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் போர் விதவைகள் உள்ளனர்.
குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு 2020 ஆம் ஆண்டில் உலகில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கையில் இருந்து வருவதாகக் கூறியது.
தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடி வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் பயங்கரவாதப் புலனாய்வுத் திணைக்களம் (TID), குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் பிற அரசாங்க புலனாய்வு அமைப்புகளால் துன்புறுத்தப்படுகின்றனர் மற்றும் அச்சுறுத்தப்படுகின்றனர்.
இந்த குடும்பங்களின் அமைதியான போராட்டங்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பல முறையீடுகள் மற்றும் தீர்மானங்கள் இருந்தபோதிலும், இலங்கை தொடர்ந்து கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) பயன்படுத்துகிறது.
பல தமிழ் அரசியல் கைதிகள் குற்றஞ்சாட்டப்படாமலோ அல்லது விசாரணையின்றி வருடக்கணக்காக சிறையில் அடைக்கப்பட்டும் அல்லது நியாயமற்ற விசாரணைகளின் பின்னர் தண்டனை பெற்ற போதும், இலங்கைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் கூட தமிழர்களுக்கு எதிரான அட்டூழியக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படவில்லை அல்லது குற்றம் சாட்டப்படவில்லை.
தற்போதைய அரசாங்கத்தினால் பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் தங்களின் தண்டனை அல்லது குற்றச் சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நீடித்து வரும் நெறிமுறை முரண்பாட்டிற்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்காமையின் காரணமாகவே தமிழர்கள் மீண்டும் மீண்டும் படுகொலை செய்யப்பட்டு வருவது இனப்படுகொலைக்கு சமம் என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கும், அதன் மூலம் தமிழ் மக்களுக்கு எதிரான பாரிய அட்டூழியங்களை நிறுத்துவதற்கும் சர்வதேச அளவில் நடத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுமக்கள் வாக்கெடுப்பு ஒன்றே ஒரே வழி என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
தமிழ் பிரதேசங்களில் அரச அனுசரணையுடன் சிங்கள பௌத்த குடியேற்றங்களை நிறுத்துவதற்கும், சிங்கள – பௌத்த பிரதேசங்களை தமிழ் மாவட்டங்களுக்குள் இணைத்து பிரதேச எல்லைகளை நிர்ணயிப்பதை நிறுத்துவதற்கும், போர் முடிந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிய நிலையில் தமிழர் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தின் அபரிமிதமான பிரசன்னத்தை குறைப்பதற்கும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்கொடுமை குற்றங்களை தடுப்பதற்கு பொதுஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களின் அன்பான கவனத்திற்கும், பரிசீலனைக்கும் மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காகவும், இலங்கையின் தமிழ் மக்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கான உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த உண்மைகளை நாங்கள் சமர்ப்பிக்கிறோம் என அக் கடிதத்தில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.