இலங்கையில் தமிழர்களுக்கு தீர்வு வழங்குவதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் தலையிடுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. “ட்ரம்பிற்கான தமிழர்கள் அமைப்பு” கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. அந்தக் கடிதத்தில், அமெரிக்க ஜனாதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் போரில் இராணுவத்தினால் ஒரு லட்சத்து 45 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிரித்தானியாவிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றுக் கொண்டதன் பின்னர் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், 2018ம் ஆண்டில் தமிழ் மக்களுக்கு நீதி கிட்டும் என எதிர்பார்த்துள்ளோம். தென் சூடானில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தைரியமான மற்றும் சரியானதுமான தீர்மானங்களை அமெரிக்கா எடுத்திருந்தது. அதேபோன்று இலங்கை வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்பட வேண்டும். இலங்கை தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இலங்கையில் ஐரோப்பிய காலனித்துவ ஆட்சிக்கு முன்னதாக தமிழ் மக்கள் சுதந்திரத்தையும் ஸ்திரத்தன்மையையும் அனுபவித்தார்கள். அதே சுதந்திரமும் ஸ்திரத்தன்மையும் ஏற்படும் என தாம் எதிர்பார்ப்பதாக ட்ரம்பிற்கான தமிழர்கள் அமைப்பு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
Be the first to comment